Pages

Ads 468x60px

30 August 2012

நான் வெறுக்கும் ஆண்கள்!


திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விருது அளித்து, அதில் நான் சந்தோஷம் அடைந்து குதித்துக் கூத்தாடியதைப் பார்த்து ரொம்பவே ரசித்திருப்பார் போல இருக்கிறது. இந்தச் சின்னப் பெண் இன்னும் சந்தோஷப்படட்டுமே என்று என்னிடம் மற்றொரு விருதையும் பகிர்ந்திருக்கிறார். அவருக்குச் சொல்கிற நன்றி என்கிற சாதாரண வார்த்தை என் மன உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தி விடாது. தூரத்தில் இருக்கிற காரணத்தால் கண்கள் பனிக்க அந்த வார்த்தையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நன்றி ஐயா.



நிரஞ்சனாவி்ன் டைரியிலிருந்து :

ஏ‌னோ தெரியவில்லை... ஆண்களின் இரண்டு செயல்களைப் பார்க்கிற போதெல்லாம் பளார் பளாரென்று அடிக்க வேண்டும் போல ஒரு வெறுப்புப் பொங்கி வருகிறது. முதலாவது விஷயம்... மரங்களின் அடியிலும், பல சமயம் பரபரப்பான சாலையின் ஓரங்களிலும் திரும்பி நின்று பாண்ட் ஜிப்பை இறக்கி விட்டு இயற்கை உந்துதலைத் தணிப்பது. விளக்குக் கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்குகிற உயிரினத்திற்கும் இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கண்ணில் படும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்கிற எனக்குள்ளே அருவருப்பும், கோபமும் பொங்கி வரத்தான் செய்கிறது.

இத்தகைய இயற்கை உபாதை பெண்களுக்கு மட்டும் கிடையாதா? இருந்தாலும் ஏன் செய்வதில்லை என்றால் வளர்க்கப்படும் முறை. சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்வது மானக் கேடு என்று அறிவுறுத்தி வளர்க்கப்படும் பெண்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அதை வைக்க முடிகிறது. அதுவே தன் மகன் ‘உச்சா’ ‌போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது என்பது என் மனதுக்குத் தோன்றுகிற விஷயம். பின்னாளி்ல் எனக்குப் பிறக்கும் மகன் இப்படிச் செய்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன். ‘‘ஐயோ... பாவம்டி!’’ ‘‘ஏய், மனஸ்! என்னை மாதிரி ராட்சசிக்குப் பிள்ளையாப் பிறந்தா அனுபவிச்சுதான் ஆகணும், தெரிஞ்சுக்கோ’’ ‘‘நான் ‌சொன்னது பிள்ளைய இல்லம்மா... உன் கழுத்துல தாலிகட்டப் போற அப்பாவி ஜீவனை நினைச்சு...’’ ‘‘அடிங்... எடு அந்தச் செருப்பை!’’

இன்னொரு கெட்ட பழக்கம்- நெரிசலான ட்ராஃபிக் மத்தியில போய்ட்டிருக்கும் போது சிக்னல்ல வண்டி நின்னுட்டாப் போதும், தலையைச் சாய்ச்சு வாயில இருக்கற எதையாவது துப்பறதும், பஸ்ல ஜன்னல் வழியா துப்பறதும். அறிவு கெட்ட மடையர்கள்...! பின்னால யாராவது இருக்காங்களான்னு கூடப் பாக்காம பல சமயங்கள்ல இப்படித் துப்பிடறாங்க. அதனோட சில துளிகள் தப்பித் தவறி சுடிதார் முனைல பட்டுட்டாக் கூட அருவருப்பா இருக்கு. அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன்.  ‘‘புதிய பூலான் தேவி கிளம்பிட்டாய்யா...’’ ‘‘தோ பாரு மனஸ்! சீரியஸாப் பேசிட்டிருக்கறப்ப ஜோக் அடிக்காத!’’

‘‘ஜோக் அடிக்கலை நிரூ. சீரியஸாவே கேக்கறேன். பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன? அதுக்கென்ன சொல்ற?’’ ''அதுவா..? பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.'' இவனுங்களை மாதிரி டிராஃபிக் நடுவுல, பான்பராக் மாதிரி கண்டதையும் மென்னுட்டு - சில சமயம் வண்டி ஓடிட்டிருக்கறப்ப கூட - அப்படியே தலையக் குனிஞ்சு துப்பற அநாகரீகம் 90 சதம் ஆண்கள் கிட்டத்தான் பாக்கறேன். எல்லாம் தான் ஸ்ட்ராங்கர் ஸெக்ஸ், ஆண்கள் எதையும் பண்ணலாம்கற திமிர் மனோபாவம். இதைப் பாக்கறப்பல்லாம் கோபமும், வெறுப்பும் சமவிகிதத்தல வருது.

சிங்கப்பூர் மாதிரி நாடுகள்ல இப்படி ரோட்டோரத்துல துப்பினா, குப்பை போட்டா அபராதம்னு இருக்கறதால சாலைகள் சுத்தமா இருக்கு. இங்கயும் அப்படிப் பண்ணினா சரியா இருக்கும்கறது என்னோட எண்ணம். ஆனா அப்படிப் பண்றதுக்கு முன்னால அரசாங்கம் எல்லாச் சாலைகள்லயும் நிச்சயமா ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைக்கணும். அப்படி்ல்லாம் ஒரு நல்ல ஆட்சி என்னோட பேரன், பேத்திகள் காலத்துலயாவது அமைஞ்சா சந்தோஷம்தான். ஹும்...!


பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

49 comments:

  1. முதலில் விருதுக்கு வாழ்த்துக்கள் நீரு
    உன் கோபம் புரியுது
    என்னதான் நாம் நம்மை நாகரீக போர்வைக்குள் ஒலித்துகொன்டாலும்
    தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை (அதில் என்ன நிறம் பூசினாலும் வெளுத்துவிடும் )

    குறைந்த மக்கள் பெருக்கம் உள்ள சிங்கபூர் போன்ற சிறிய நாட்டில்
    இதுமாதிரியான விஷயங்களை கட்டப்படுத்த இயலும்

    மக்கள் பெருக்கம் உள்ள நம் இதியாவில்
    சட்டங்களும் .தண்டனைகளும் கடுமையாய் இருக்கவேண்டும்
    அப்படி இருந்தாலும் நல்ல குடிமக்களாய் அதை பிபற்றும் மனம் இருத்தல் அவசியம்
    அது இங்கு .......இல்லை

    ReplyDelete
    Replies
    1. புரியுது அண்ணா... மக்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம். அது அவ்வளவு சுலபத்தில் நடக்கிற காரியமில்லைங்கறது மனசுக்குத் தெரியுது, இருந்தாலும் என் ஆதங்கம் கோபமாவும் சிலசமயம் வெளிவந்துடுது. வேற யார்ட்ட நான் ஷேர் பண்ணிக்கறது? புரிஞ்சுக்கிட்டு நல்ல கருத்துச் சொன்ன உங்களுக்கு சந்தோஷமா என் நன்றி.

      Delete
  2. நான் வெறுக்கும் ஆண்கள்! என்ற தலைப்பையும் முதல் ஒருசில வார்த்தைகளான

    திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்

    என்பதையும் பார்த்து நான் மிகவும் பயந்து போனேன்.

    அன்புடன் விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தாங்கள் சொல்லியுள்ள விஷயங்கள் சமுதாய சிந்தனையுடன் கூடியது.
    நிச்சயமாக ஆண்கள் [ஒருசில பெண்களும் கூட] அனைவரும் சிந்திக்க வேண்டியதே! சுத்தம் சோறு போடும். சுகாதாரம் நோய் நொடியின்றி வாழ வழி வகுக்கும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. அடாடா... உங்களை யாராவது வெறுக்க முடியுமா ஐயா... என் சிந்தனைகளைப் பாராட்டின உங்களோட அன்புக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.

      Delete
  3. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ!

    மக்களை கட்டுப்பத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் என்பது.., சிங்கப்பூர் மாதிரியான குறைந்த நிலப்பரப்பும்..... குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகளில் தான் சாத்தியம்; நம்மை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இவையெல்லாம் சாத்தியமில்லை இருப்பினும் பெரிய நிலப்பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்ட சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நம் அளவிற்கு இந்த விசயங்களில் மோசம இல்லைங்கிறதும் உண்மைதான்!

    அப்பால உங்க மனச்சாட்சி சொன்ன மாதிரி இவ்வளவு கோபப்படுர உங்களை கட்டிக்கிப்போற அந்த பாவப்பட்ட ஜீவனை நினைச்சா கொஞ்சம் பரிதாபமாத்தான் இருக்கு... ம்ம்ம் என்ன பண்ணுறது விதி வலியதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! போன பிறவியில அந்த மனுஷன் என்ன பாவம் செஞ்சாரோ! :)

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்தினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். சுத்தம் விஷயத்தில் நீங்க சொன்ன கருத்துக்களை நான் ஏத்துக்கறேன்... அப்பறம்... நிரஞ்சனாவுக்கு எல்லாரும் நல்லா இருக்கணும்கற ஆசையும், அக்கறையும் இருக்கறதாலதான் இந்த மாதிரி கோபமே வருது. அதை வரப்போற ஜீவன் புரிஞ்சுக்கும்கறது என் கனவு. நிச்சயம் பாவப்பட்ட ஜீவனா இருக்காதுங்க சார். மிக்க நன்றி.

      Delete
  4. ஹாய் நீரு!! விருதுக்கு வாழ்த்துக்கள்!!!

    உங்களமாதிரி நானும் ரொம்ப கோபப்பட்டு இருக்கேன்ப்பா... ஒரு முறை பைக் ல வந்த ஒருத்தன் இதுபோல எச்சிலை துப்ப அது சரியாக என் புது சுடிதாரில் (முதல் நாள் போட்டுவந்தபோது) வந்து விழுந்தது... அப்ப மட்டும் அவன் நின்னு இருந்தான் என் கோவத்துல கொலையே செஞ்சிருப்பேன்... இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க....

    ReplyDelete
    Replies
    1. ஹாய்... பதிவர் திருவிழா புகைப்படங்கள்ல உங்களைப் பாத்தேன். ரொம்ப அழகா இருக்கீங்க. எனக்கிருந்த அதே கோபம் உங்களிடமும் வெளிப்படறதை மிக ரசிக்கிறேன் நான். உங்களுக்கு சந்தோஷமான என் நன்றி.

      Delete
  5. விருதுக்கு வாழ்த்துக்கள் நிரு.ரொம்ப காரமாக இருக்கீங்க போலிருக்கு.அது மட்டுமல்ல சென்னையில் ஆட்டோவில் செல்லும் பொழுது இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பான்பராக் போன்ற வஸ்தை மென்று கொண்டு வரும் பொழுது கிளம்பும் நாற்றம் உள்ளதே.ஐயோ..அதை விட கொடுமை என்னவென்றால் ஆட்டோ ஓடிக்கொண்டே இருக்கும் பொழுது வாயில் உள்ளதை சாலையில் புளிச் என்று துப்பும் பொழுது பின்னால் உட்கார்ந்திருப்பவர்களைப்பற்றி சிந்திப்பதே இல்லை.இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்.?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதான் தெரியலை Dear SS! விருது பெற்றமைக்காய் வாழ்த்தின உஙுகளுக்கு சந்தோஷததோட என் நன்றி.

      Delete
  6. //தன் மகன் ‘உச்சா’ ‌போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது//

    நீங்க சரியான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். மாற்றம் பெற்றோருக்கே தேவை!
    நீங்கள் திருமணத்தின் பின் இவ்வளவு தீவிரமாக இருக்கமாட்டீர்கள். பழக்கத்துக்கு வந்து விடுவீர்கள்.பாவம் போய் தொலைகிறாங்க என விட்டுவிடுவீர்கள்.
    அடுத்து நாட்டின் அரசு... நல்ல நீர் வசதியுடன் பொதுக் கழிவறைகளை மக்கள் கூடுமிடங்களில் அமைத்துக் கொடுக்கவேண்டும்.
    நம் நாடுகளில் இது நடக்குமா?

    ReplyDelete
    Replies
    1. என் கருத்துக்களுடன் ஒத்திசைவான உங்களின் கருத்துக்களில் மகிழ்ந்து போகிறேன் நான். மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. தங்கள் கோபம் நியாயமானதே
    புரியவேண்டியவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்
    இது நாடு சம்பந்தப்பட்டதில்லை
    நாக்ரீகம் சம்பத்தப்பட்டது
    பயனுள்ளபதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரிதான் நீங்கள் சொல்வது. நாகரீகம் பற்றிய நடத்தை வகுப்புகள் பள்ளி நிலையிலிருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்.

      Delete
  8. நியாயமான கோபம் தான்! விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஏற்று என்னை வாழ்த்திய உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.

      Delete
  9. ஒரு அறிவியல் உண்மை என்னவென்றால், பெண்களால் நீண்ட நேரம் சிறுநீரை அடக்க முடியும் ! ஆண்களால் அது முடியாது ! காரணம் , அநேகமாக ஆண் ஹார்மோனைச் சுரக்கும் பராஸ்ட்ரேட் சுரப்பியும் ' பிளேடர் ' எனும் சிறுநீர் பையும் அருகருகே ஆண்களுக்கு அமைத்துள்ளது காரணமாக இருக்கலாம் ! அதோடு, கழிப்பறை வசதிகள் சரியான படி இருந்தால் ஆண்கள் ஏன் அவ்வாறு செய்யப் போகிறார்கள் ??

    அடுத்தாக அந்த " துப்புதல் " பற்றிச் சொன்னீர்கள். வாஸ்தவமான பேச்சு ! துப்புபவனைக் கண்டாலே சவட்டி சவட்டி அடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வருகிறது ! " மேலிடத்தில் " சொல்லி ஏதாவது சட்டம் கிட்டம் கொண்டு வர வேண்டும் தோழி !

    நல்ல சமூக அக்கறை தங்களுக்கு ! யதார்த்தமான வரிகள் ! அந்த " மனஸ் " அருமை !

    ReplyDelete
    Replies
    1. அடடே... எனக்கு இந்த அறிவியல் உண்மை தெரியாதுங்க நிஜமா. இப்படி ஒரு பின்னணி இருக்கா என்ன? சாலையில் துப்புகிறவர்களை யாருமே ஆதரிப்பதில்லை என்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம், டைரில எழுதறப்பல்லாம் என் மனஸ் ஜாலியா பூந்து விளையாடும். அதை ரசிச்ச உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.

      Delete
  10. எச்சில் துப்புவர்கள்
    குப்பை நடுத்தெருவில் போடுபவர்கள்.
    கையேந்தி பவன் என்று சுண்டல், பேல் பூரி, வடை, மசாலா வியாபாரம் செய்து அங்கேயே அசுத்தமான டம்ளர் டவராக்களில்
    தண்ணீர் குடித்து, கழுவி சாலையில் பாதசாரிகள் நடக்கும் இடத்தை கூவத்தை தோற்கடிக்கும் கொசுக்கூடாரங்களாக
    மாற்றுபவர்கள்.
    வீட்டை இடித்து அத்தனை பாராங்கல், செங்கல் குப்பைகளையும் போட்டு சாக்கடை நீரை தேக்குபவர்கள்.
    டாஸ்மாக் கடைகளில் அங்கேயே குடித்துவிட்டு நடுரோட்டில் விழுத்து ஸ்வர்க்கத்தில் சஞ்சரிக்கும் சுகவாசிகள்.
    கார்ப்பொரேஷன் தண்ணீர் தொட்டிகளுக்கு தன்னைத் தானே காவலராக்கிக்கொண்டு தண்ணீர் எடுக்க வரும்
    நபர்களிடமிருந்து ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என பிடுங்கும் எத்தர்கள்.

    எனத்துவங்கினால் லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகிறதே !!

    இத்தனைக்கும் நடுவிலே நல்லவர்களும் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.
    மனித நேயம் இருக்கிறது.

    மனிதா ! நீ வாழ்க..

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. இந்தச் சிறியவளின் எழுத்தைப் படித்து விரிவான கருத்துத் தந்த உங்களுக்கு என் மனசு நிறைய நன்றிங்க ஐயா.

      Delete
  11. ///பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன? அதுக்கென்ன சொல்ற?’’ ''அதுவா..? பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.''///
    சென்னை மட்டும் தான் தமிழ் நாடா? செங்கல் பட்டைத் தாண்டுங்க; வாங்க தெக்க' கொங்கு நாட்டு அம்மணிகள் பஸ்சில் இருந்து கொண்டு மக்கள் மீது செய்யாத அபிஷேகமா? பழனியில் பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அம்மணிகளின் ஸ்பெஷல் அபிஷேகம் உண்டு!

    இந்த சின்ன வெத்தலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை வைக்க ஒரு சின்ன பொட்டிக் கடையை அம்மணிகள் சுருக்குப் பை ரூபத்தில் வைத்திருப்பார்கள்!

    Please do not generalize and stereotype anything in this world!

    ReplyDelete
    Replies
    1. ஸார்... நான் அதிகம் வெளியூர்ப் பயணங்கள் செஞ்சதில்லை. சென்னைப் பொண்ணா இருக்கறதால நான் பாத்ததை மட்டும் எழுதிருக்கேன். நீங்க சொல்றது மாதிரி கேள்விப்பட்டிருக்கேன். நன்றி ஸார்.

      Delete
  12. மறந்து விட்டேன்; ஆண்களை விட இந்த வெத்தலை பழக்கம் பெண்களிடம் மிக மிக அதிகம்!

    ReplyDelete
    Replies
    1. எவராக இருந்தாலும் நான் அதை விரும்பவில்லை ஸார். மிக்க நன்றி.

      Delete
  13. விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

    திருந்துவார்களா.... குட்கா பழக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தற்போது தான் இதைத் தடை செய்ய சில மாநில அரசுகள் முன் வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அரசு தடை செய்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன் நான். என்னை வாழ்த்தினதுக்கு சநதோஷமான என் நன்றி ஸார்.

      Delete
  15. நீரு,

    நான் நினைச்சதை அப்படியே சொன்னதுக்கு நன்றி. எவ்வளோ அருவருப்பான விஷயம் இது:( யக்.

    அதென்ன எப்பப் பார்த்தாலும் எச்சில்துப்பும் வழக்கம். இவுங்களுக்கெல்லாம் தொண்டையில் என்ன இருக்குன்னு நினைப்பேன்.புத்துநோயோ?

    எங்கிட்டே மட்டும் ஒரு மெஷீன் கன் இருக்கணும்.........

    ReplyDelete
    Replies
    1. ஹய்... ஸீனியரான நீங்க என் கருத்தை எதிரொலிச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. மிக்க நன்றி.

      Delete
  16. viruthukku vaazhthukkal!


    enna oru kolai veri....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தினதுக்கு நன்றிங்க. கொலைவெறி சில விஷயங்களை சகிச்சுக்க முடியாம வந்துடுது. இனி குறைச்சுக்கறேன் ஸார்.

      Delete
  17. விருதுக்கு வாழ்த்துக்கள்!!!..
    Discipline should come within.
    There should be a revolution, then only India(ans) can improve.
    As Gandhi said, let us be the change the , we wish to see in this world, by seeing us, atleast 5 to 10 people will change themselves.For example, How many of us are following traffic rules?, when the policemen is not there, though, the signal is in red, if there is no traffic, we happily violate the rules. Like this, there are so many violations, we need to curb in our daily life.
    Let us bring the revolution together.
    Kindly forgive me, if there is anything wrong in my statement.

    Ezhini.P

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன் எழினி. நடக்கற விஷயங்களைச் சரியாகச் சொல்லியிருக்கீங்க. ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.

      Delete
  18. nice messages niranjana.

    http://www.venkicorner.blogspot.in/2012/08/blog-post.html

    please read and comment

    ReplyDelete
    Replies
    1. I thank with full of my heart venkatesan Sir. Surely i'll visit your blog sir.

      Delete
  19. விருதுக்கு வாழ்த்துகள் முதலில்.............

    ஆண்கள் மரத்தடியையும் விளக்குக் கம்பத்தையும் அசிங்கப் படுத்துகிறார்கள் என்ற விடயத்தில் சரியாக என்னால் உடன் பட முடியாமலுள்ளது....மேலுள்ள பின்னூட்டங்களை படிப்பதற்கு நேரமில்லையால் சொல்ல வந்த விடயத்தை விரைவாகச் சொல்லுகிறேன்...........

    முதலில் உட்கட்டுமான வசதிகளை அரசாங்கம் பூரணமான முறையில் செய்திருக்க வேண்டும்......பொது இடங்களில் பொது மல சல கூடங்களை அரசோ அல்லது தனியார் நிருவனங்களோ செய்திக்க வேண்டும்..

    இன்றைக்கு நிறைய தனியார் நிறுவனங்கள் அதிகளவான இலாபத்தில் இயங்குகின்றன வெறுமெனே அவர்களுடை விளம்பரங்களை பெரிய பெரிய பலகைகளில் பொருத்தி காட்சிப் படுத்துவதை விட முக்கியமான இடங்களில் இப்படியான வசதிகளை செய்து அங்கே அவர்களுடைய விளம்பரங்களையும் பொருத்திவிடலாம் இதனால் பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்த புண்ணியமும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.....

    சலங்களை உரிய நேரத்தில் அகற்றாவிட்டால் நோய்கள் ஏற்படுகின்றன என்று இன்றைய வைத்திய உலகம் சொல்கிறது..ஆகவே குறிப்பிட்ட ஒரு தொலைவுக்கு அப்பால் இப்படியான பொது மலசல கூட வசதிகளை அரசோ அல்லது வேறு யாரோ செய்திருந்தால் ஆண்கள் ஏன் மரத்தடி நிழலை அசிங்கப் படுத்தப் போகிறார்கள்......

    ஆகவே இந்தப் பதிவு போய்ச் சேரவேண்டியவர்கள் ஆண்களை விட அரசாங்கமும் அதிக இலாபத்தில் இயங்கும் தனியார் நிருவனங்களும் மற்றும் பிரபலத்தை வேண்டி நிற்பர்களுக்குமேயாகும்/\
    இது என்னுடைய சின்ன கருத்து....

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கம் வசதி பண்ணித் தரணுங்கறதுல மாற்றுக் கருத்தே இல்லை. ஆனாலும் மக்களும் கொஞசமாவது சுற்றுப்புறத்தை நினைக்கணுங்கறதுதான் என் கருத்து. விரிவான கருத்துக்கு ரொம்ப நன்றி ஸார்.

      Delete
  20. என்ன காரணங்கள் இருந்தாலும் தப்பு, தப்பு தான்... மாற வேண்டும்... VGK ஐயா கருத்தில் சொன்னது போல் நானும் ஒரு நிமிடம் பயந்து விட்டேன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நீங்களும் ஏமாமந்துட்டீங்களா. நீங்களும் என் கருத்தோட ஒத்துப் போறதைப் பாக்க சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி பிரதர்.

      Delete
  21. நிரு என்னடா இது எண்டு பாத்தன்.இப்ப சரிதான் உங்கட ஆதங்கம்,ஆத்திரம் தான் வருது....!இன்னும் சத்தமாக பேசணும்.இப்பிடி நியாயமான ஆத்திரம் வரத்தான் வேணும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் கோபத்தை நீங்க ஆமோதிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு அதிஸயா. ‘ரௌத்திரம் பழகு‘ அப்படின்னு ஒரு கவிஞர் இந்த மாதிரி விஷயங்களுக்கெதிரா கோபப்படத்தானே கத்துக் குடுத்தார் நமக்கு? உங்களுககு ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.

      Delete
  22. நிரோக்குட்டி....உந்த பழக்க வழக்கமில்லாத ஆம்பிளைகளப் போட்டுப் பிரட்டி எடுத்திட்டீங்கள்..உந்தச் சிட்டுவுக்கு ஏன் கோவம் வருது?அப்பிடியே அரசாங்கம் பொதுக்கழிவறை கட்டிக்குடுத்திட்டா மினக்கெட்டு அங்க போவினமாமோ.....அதுகளுக்கு அதுதான் பழக்கம்.இன்னும் கன விஷயம் இருக்கு உவையளைப் பற்றி உடைச்செறிய...நிறையச் சொல்லுங்கோ.நான் கை தட்டிச் சொக்லேட்டும் தருவன்.ஆனால் என் ஃப்ரெண்டுக்கு குடுக்காதேங்கோ !

    விருது வாங்கின உங்களுக்கு வாழ்த்துகள்.இப்பிடி எழுதினால் இன்னும் நிறைய வாங்கலாம் !

    ReplyDelete
    Replies
    1. என செல்லக் கவிதாயினிக்கா... சொக்லேட் தந்து பாராட்டி என்னை உற்சாகப்படுத்தற உங்க அன்புக்கு இணை எதுவுமில்லை. விருதுக்கு வாழ்த்தி என்க்கு சந்தோஷம் தந்த உங்களோட கருத்துக்கு என்னோட மனம் நிறைய நன்றி சொல்றேன்.

      Delete
  23. விருதுக்கு வாழ்த்துகள் நிரஞ்சனா,

    //அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன்.//

    ஆத்தா.. மும்பைக்கு வாங்க. உங்க பிஸ்டலுக்கு நிறைய வேலை இருக்கு. ஒரே நாளில் மும்பையின் மக்கள் தொகை பாதியாகக் குறைந்து விடும் :-)))

    ReplyDelete
    Replies
    1. அடேயப்பா... ஒரே நாள்ல மும்பையின் ஜனத்தொகை என் கோபத்தால பாதியா குறைஞ்சிடும்னா... அங்கயுமா ஜனங்க இப்படி இருக்காங்க..? எனக்கு அழறதா சிரிக்கறதான்னே தெரியலை மேடம்- மனுசங்க இயல்பை நினைச்சு. விருதுக்கு வாழ்த்தின உங்களுக்கு சந்தோஷத்தோட என் நன்றிகள்.

      Delete
  24. விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா! தங்களுடைய கோபம் நியாயமானதே! இந்த விஷயத்தில் நானும் தங்களை போல் பல சமயம் கோபப்பட்டிருக்கிறேன்! ஆனால் குரு சந்திரன் அண்ணா சொன்ன அறிவியல் விஷயத்தை நான் படித்திருக்கிறேன்! ஆனால் எச்சில் துப்புபவர்களை விடக்கூடாது!

    ReplyDelete
  25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  26. இந்த இனிய நின்னாளில் வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
  27. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!