Pages

Ads 468x60px

Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

14 May 2012

மறுக்க முடியாத சாட்சி!


ங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் அரதன குப்தன்ங்கற ஒரு வணிகன் தன் மனைவியோட வாழ்ந்துட்டிருந்தான். அவனுக்கு ஒரு தாய்மாமன் புகார் நகரத்துல இருந்தார். அவருக்கு ஒரு மனைவியும் ரத்னாவளி என்கிற ஒரு மகளும் இருந்தாங்க. மதுரையில இருக்கற தன்னோட மருமகன் கல்யாணமானவனா இருந்தாக்கூட மனிதர்கள்ல ஒரு மாணிக்கம் போல நல்ல கேரக்டர் உள்ளவன்கறதால அவனுக்கே தன் மகள் ரத்னாவளியை கல்யாணம் பண்ணிக் குடுத்துடலாம்னு நினைச்சாரு அந்தத் தாய்மாமன்.

அந்தப் பு்ள்ள ரத்னாவளிக்கும் அரதனகுப்தனைக் கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் இருந்துச்சு. அதனால, அரதனகுப்தனுக்கு லெட்டர் மேல லெட்டரா அனுப்புனாரு தாய்மாமன். ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஊர்ல இருக்கறவங்களும், உறவுகளும் என்ன பேசுமோன்னு பயந்து போயி, பதிலே சொல்லாம இருந்துட்டான் இந்த ஆள். இந்த நேரத்துல தாங்க விதி விளையாடிச்சு... ஒரே நாள்ல ரத்னாவளியோட தாயும், தந்தையும் இறந்து போயிட்டாங்க. அவ தனியா நின்னா.

தகவல் தெரிஞ்சதும் அரதனகுப்தன் வேகவேகமா புகாருக்குப் புறப்பட்டுப் போனான். மாமன் மகளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு, அவளைக் கூட்டிக்கிட்டு மதுரைக்கு பயணம் புறப்பட்டான். ரத்னாவளி கட்டுசாத மூட்டை கட்டி எடுத்துக்கிட்டா. ரெண்டு பேருமா வர்ற வழியில ஒரு புன்னைவனம் இருந்ததைப் பாத்தாங்க. அந்த வனத்துல ஒரு வன்னிமரம் இருந்துச்சு. அதுக்கருகில ஒரு சிவலிங்கமும், தேனான சுவை நீருடன் ஒரு கிணறும் இருந்துச்சு. ஈஸ்வரனே காவலுக்கு இருக்கற அந்த இடத்தில நைட் தங்கிட்டுப் போலாம்னு முடிவு பண்ணி, கட்டுச் சோத்தை அவுத்துச் சாப்ட்டுட்டு, கிணத்துத் தண்ணிய அள்ளி அள்ளிக் குடிச்சாங்க.

நடந்து வந்த களைப்பும், உண்ட மயக்கமுமாச் சேர்ந்ததுல சொகமா வந்துச்சு உறக்கம். வன்னி மரத்தடியில தலைசாய்த்துப் படுத்து உறங்கிட்டாங்க. நட்டநடு ராத்திரியில ஒரு நல்லபாம்பு அந்தப் பக்கமா வாக்கிங் வந்துச்சு. கெரகம், சும்மாப் போகாம அது அரதனகுப்தனைக் கொத்தி போட்டுப் போய்டுச்சுங்க. அவன் ஆயுசு முடிஞ்சிடுச்சு. காலையில ரத்னாவளி எழுந்ததும் அவன் பாம்ப கடிச்சு செத்துக் கிடக்கறதப் பாக்கறா. ‘ஐயோ...’ன்னு அலறுறா. உருண்டு புரண்டு ஒப்பாரி வெச்சு அழறா...

அப்ப அந்த இடத்தை பக்தர்கள் புடைசூழ கிராஸ் பண்ணிட்டிருந்தார் தமிழ்நாடு டூர் அடிச்சுட்டிருந்த திருஞானசம்பந்தர்ங்கற மகான். அவரோட காதுல அந்தப் பெண்ணோட கதறல் கேட்டுச்சு. புன்னை வனத்துக்குள்ள வந்தாரு. இறந்து கிடந்த இளைஞனையும், அழுது பொலம்பற பொண்ணையும் பாத்துட்டு, ‘‘என்ன நடந்தது?’’ன்னு கேட்டாரு. அவ சொல்லி அழுதா. அவர் ஈசனை நினைச்சு இரு கரம் நீட்டி முறையிட்டாரு அந்தப் பொண்ணுக்காக. உடனே ஒரு அதிசயம் நடந்துச்சு. அரதனகுப்தனைக் கடிச்ச பாம்பு மறுபடி வந்து அவன் உடம்புல இருந்த தன்னோட விஷத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சின மாதிரி உறிஞ்சி வாபஸ் எடுத்துக்கிச்சு. அவன் தூங்கி எந்திரிச்ச மாதிரி கண்ணு முழிச்சு, எல்லாரும் கேக்கற ‘‘நான் எங்க இருக்கேன்’’கற டயலாக்கை தவறாம கேட்டான். ரத்னாவளிக்கு ரொம்ப குஷியாய்டுச்சு.

சம்பந்தர் சுவாமிகள் அவங்களைப் பத்திக் கேட்டதும் எல்லாத்தையும் விரிவாச் சொன்னாங்க. அவர் சிரிச்சாரு. ‘‘எப்போ, ஈஸ்வரன் எதிர்ல  ரெண்டு பேரும் ஒண்ணா இரவைக் கழிச்சீங்களோ, அப்பவே உங்களுக்கு கல்யாணமானதாதான் அர்த்தம். அதனால, மதுரைக்கு போய் கல்யாணம் பண்ணிக்கறதவிட, ஈசனுக்கு எதிர்லயே ஒரு தாலியக் கட்டி இவளை மனைவியாவே மதுரைக்குக் கூட்டிட்டுப் போ’’ன்னாரு.  பெரியவர் சொன்னா மறுபேச்சு ஏதுன்னு அவனும் ஈசன் எதிர்லயே ரத்னாவளிக்கு ஒரு தாலியக் கட்டி மதுரைக்கு தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான். அவளோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சு, அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்களும் பொறந்துடுச்சு.

ரு நாள் விளையாட்டு சண்டையில, மூத்தவளின் குழந்தைகளை இளையவள் (ரத்னாவளி) குழந்தைங்க அடிச்சிடுச்சுங்க. அந்தப் புள்ளைங்க அழுதுட்டே அம்மாட்ட கம்ப்ளைண்ட் பண்ணிச்சு. ஏற்கனவே தன் லை‌ஃபை பங்கு போட்டுக்கிட்ட ரத்னாவளி மேல அந்தம்மாவுக்கு காண்டு. அதனால அவ, ரத்னாவளிய வைப்பாட்டின்னும், முறையா தாலி கட்டிக்காம தன் கணவனை மயக்கினவன்னும் தி்ட்டி சண்டை போட்டு, அவளை வீட்டை விட்டு விரட்டிட்டா. தான் தாலி கட்டின மனைவின்னு வாதாடினதை அவ கேக்காததால ரத்னாவளி அவள் மேல வழக்குப் போட்டா.

மதுரை ஆலயத்தோட மைய மண்டபத்துல அவளோட வழக்கை விசாரிச்சாங்க. (அப்பல்லாம் அதான் கோர்ட் போல) வன்னி மரத்தடியில, கிணற்றங்கரையில, ஈசன் முன்னிலையில தன் கல்யாணம் நடந்துச்சுன்னு ரத்னாவளி சொல்ல, அதை பொய்யின்னு சொன்னா மூத்தவள்.  தான் உத்தமின்னும், பத்தினின்னும் ரத்னாவளி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், யாரும் நம்பலை. நாட்டாமை மாதிரி சாட்சி என்னன்னு கேக்கவும், ரத்னாவளி வேற வழி இல்லாம ஐ விட்னஸா இருந்த ஈசன் கிட்ட அழுது முறையிட்டா. ஈசன் அசரீரியா குரல் கொடுத்தாரு. ‘‘ரத்னாவளி வன்னி மரத்தடியில என் முன்னால கல்யாணம் பண்ணிக்கிட்டது உண்மைதான். அவ கல்யாணத்துக்கு சாட்சியா இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் இந்தக் கோயில்ல என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில ‌கொண்டுவந்திருக்கேன். அதைப் பாத்தீங்கன்னா, ரத்னாவளி களங்கமற்றவன்னு உங்களுக்கே புரியும்’’ன்னு சொல்லிச்சு அசரீரி.

உடனே எல்லாரும் ஓடிப் போய் சொக்கநாதர் சன்னதியோட ஈசானிய மூலையில பாத்தாங்க. அங்க சிற்ப வடிவுல வன்னி மரமும், கிணறும், லிங்கமும் இருந்துச்சு. அவ்வளவு தான். லார்ட் ஈஸ்வரனே சாட்சி சொன்னப்புறம் கேஸ் நிக்குமா? ரத்னாவளிக்கு சாதகமா தீர்ப்பு கொடுத்தாங்க. மூத்தவளும் வாய் பேசாம அவளை ஏத்துக்கிட்டா. அன்னிலருந்து ரெண்டு பேரும் ஒத்துமையா, சண்டை போடாம அரதனகுப்தனோட குடும்பம் நடத்தத் தொடங்கினாங்க. இந்தக் கதை திருவிளையாடற் புராணம் என்கிற நூலில் சொல்லப்பட்டிருக்கு.

-சமீபத்துல மதுரைக்குப் போயிருந்தப்ப, சிவன் சன்னிதி மூலையில இந்தக் கிணறு, லிங்கம், மரம் மூணையும் மக்கள் சுத்தி வந்து கும்பிடறதப் பாத்துட்டு நான் கேட்டதுக்கு எங்கம்மா சொன்ன கதை இது. உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா... வெல், மறுபடி சாமி கதையப் படிச்சா தப்பில்ல தானே... கேள்விப்பட்டதில்லைன்னு சொன்னீங்கன்னா... நான் தெரிஞ்சுகிட்டதை உங்களோட ஷேர் பண்ணிக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! ஸீ யு!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மறுக்க முடியாத சாட்சி!"

9 March 2012

மனிதனுக்குள் மிருகங்கள்!

பிரம்மா பூவுலகத்தைப் படைச்சதும் அங்கு மனிதர்களையும், ஆடு மாடு முதலிய மிருகங்களையும் படைக்க விரும்பினார். முதலில் குரங்குகளைப் படைத்து, ‘‘ஓ குரங்குகளே! உங்களுக்கு நாற்பது ஆண்டு ஆயுள் தருகிறேன்’’ என்றார். குரங்குகள், ‘‘மரங்களில் தாவித் தாவி வாழ்வதும் ஒரு வாழ்வா? வெயில், மழை எதற்கும் வீடு கிடையாது எங்களுக்கு. காட்டில் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கு வேறு பயப்பட வேண்டியுள்ளது. ஆகவே எங்களுக்கு இருபது வயதே போதும் என்றன. பிரம்ம தேவர், ‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று சொல்லி விட்டார்.

பிறகு எருதைப் படைத்து, ‘‘உங்களுக்கு நாற்பது வயதைத் தருகிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?’’ என்று கேட்டார். எருது கண்களில் நீருடன் சொல்ல ஆரம்பித்தது: ‘‘இரவு பகல் என்று வேறுபாடு இல்லாமல் எங்களை வேலை செய்யும்படி மனிதர்கள் வற்புறுத்துகிறார்கள். ஏதோ நான்கு வைக்கோலை எங்கள் முகத்துக்கு எதிரில் தூவி விட்டு தண்ணீரையும் சரிவர அளிக்காமல் மனிதர்கள் மட்டும் சுகமாக வாழ்கின்றனர். ஆகவே எங்களுக்கு இருபது வயது இருந்தாலே போதும்’’ என்றன. ‘‘சரி, அப்படியே...’’ என்று விட்டு விட்டார் பிரம்மன்.

மூன்றாவதாக நாயைப் படைத்து அவற்றிடமும் முந்தையவற்றிடம் கேட்ட கேள்வியையே கேட்டார். ‘‘நாங்கள் அளவற்ற பாவம் செய்து இப்பிறவியை அடைந்திருக்கிறோம். யாரையாவது திட்ட வேண்டுமென்றால் ‘சீ நாயே’ என்றுதான் திட்டுகிறார்கள். மனிதர்களுக்கு மிக உபயோகமாக காவல் காத்து, திருடர்களைப் பிடித்து தருகிறோம். இவ்வளவு செய்தும் எங்களை வீட்டிற்குள் விடாமல் துரத்தியடிக்கிறார்கள். இத்தகைய இழிபிறவிகளான எங்களுக்கு இருபது வயதே போதும்’’ என்று விட்டன நாய்கள். அவற்றின் பேச்சில் மனமிரங்கிய பிரம்மா, ‘‘அப்படியே ஆகுக’’ என்று சொல்லி விட்டார்.

நான்காவதாக வெளவாலைப் படைத்து அவற்றிடம் முன்போலவே கேட்டார். அவையோ, ‘‘குரங்கு, நாய், எருது இவற்றைவிட நாங்கள் கீழானவர்கள். எங்களுக்கு வாக்குதம் என்று பெயர். வாயும் ஆசனவாயும் எங்களுக்கு ஒன்று. இருள் அதிகமாக உள்ள இடங்களில் வசித்து, தலைகீழாகத் தொங்குவது எங்கள் வாழ்வு. இப்படி பலவித துன்பங்களை அடைந்துள்ள எங்களுக்கு இருபது வயதே போதும்’’ என்றன. பிரம்ம தேவர் அவற்றுக்கும் இசைந்தார்.

இந்த நான்கு பிராணிகளும் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு மனிதனைப் படைத்து, இவற்றைவிட அறிவுள்ளவனாக அல்லவா படைத்திருக்கிறோம் என்று எண்ணி மனிதனிடம், ‘‘உனக்கு நாற்பது வயது வேண்டுமா? இல்லை இருபதே போதுமா?’’ என்று கேட்டார். மனிதன், ‘‘பிரம்மதேவரே! நாங்கள் மனிதர் அல்லவா? எங்களுக்கு கைகளும், கால்களும், அறிவும் உண்டு. இருபது வயதிற்குள் என்ன சுகம் அனுபவித்துவிட முடியும்? எனக்கு அதிக ஆயுள் வேண்டும்’’ என்று கேட்டான். பிரம்மதேவர் உடனே, ‘‘சரி, அந்த நான்கு பிராணிகளும் வேண்டாமென்று மறுத்த தலா இருபது வயதுகளை (4 x 20) சேர்த்து உனக்கு நூறு வயதாக அளிக்கிறேன்’’ என்றார். அரை மனதாக ஒப்புக் கொண்டான் மனிதன்.

இப்படி நான்கு ஜந்துக்களின் இருபது இருபது வயதை மனிதன் அடைந்தான் என்பதை அவை செய்யும் தொழிலை அந்த இருபது வருடங்களில் மனிதன் செய்வதனாலேயே புரிந்து கொண்டு விடலாம். முதல் இருபது வருஷங்கள் குரங்கின் வயது. எனவே குரங்கின் சேஷ்டைகள் அந்தப் பருவத்தில் இருக்கும். ஒரு இடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் ஓடி அலைகிறான். ‘‘என்ன குரங்கு சேட்டைடா’’ என்று பெற்றோர்கள் திட்டுவதும் உண்டு இப்பருவத்தில்.

இருபது முதல் நாற்பது வயது வரையில் எருதின் வயது. எருது எப்படிப் பாரங்களை சுமக்கிறதோ அப்படி குடும்பத்தின் பாரத்தைச் சுமந்து, அன்ன ஆகாரம் தேடி ஊரூராக மாறி வேலைகளைச் செய்கிறான். நாற்பது வயது முதல் அறுபது வயது வரையுள்ள வயதுதான் மனிதனுக்கு என்று பிரம்மன் வகுத்த வயது. மனிதனுக்குண்டான வேலைகளை அப்போதுதான் அவன் சரிவரச் செய்கிறான். புராணங்களைப் படிப்பதும், கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதும், பெரியவர்களிடம் எல்லாம் மரியாதையுடன் இருப்பதும் ஆக பண்பட்ட எண்ணங்களும், பழக்க வழக்கங்களும் கொண்டு மனிதன் வாழ்கிறான்.

அறுபது வயது முதல் எண்பது வயது வரை நாயின் வயது. தேகத்தில் சக்தி குறைந்து விடுவதால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கி வீட்டைக் காவல் செய்யும்படி ஏற்படுகிறது. சிறியவர்கள், வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி விட்டு விட்டு வெளியே போய் விடுவார்கள். எண்பது முதல் நூறு வயது வரையிலோ வெளவாலின் வயது. பகலிலேயே சரியாக பார்க்க முடியாமல் போவதும், சுவாதீனமாக உட்காரவோ படுக்கவோ முடியாமல் கஷ்டப்பட்டுதான் இருக்க முடியும்.

இப்படி அந்தந்த வயதுகளில் மனிதனுக்கு ஏற்படும் சுபாவ மாற்றங்கள் எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தனக்கு கிடைத்த வயது போதாது போதாது என்று மேலும் மேலும் மனிதன் ஆசைப்பட்டுக் கேட்டதால் தான் இப்படி அதிக காலம் வாழ்வதும், துன்பப்படுவதும் ஏற்பட்டது.

-Hai Friends..! நல்லாத்தானே இருந்தா இந்த நிரஞ்சனா? திடீர்னு என்ன ஆச்சு இவளுக்கு? சாமியாராப் போய்டப் போறாளான்னு நினைச்சுடாதீங்க... என் மம்மி வெச்சிருந்த ஆன்மீக புஸ்தகங்கள்ல ‘வைதீக ஸ்ரீ’ன்னு ஒரு புக் இருந்துச்சு. சும்மா புரட்டினப்ப இந்தக் கதையப் படிச்சேன். மேட்டர் நல்லா இருக்கேன்னு தோணிச்சு. உடனே உங்க கூடல்லாம் Share பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் புடிச்சிருக்கா?
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மனிதனுக்குள் மிருகங்கள்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!