Pages

Ads 468x60px

1 June 2012

நவீன நரகாசுர ஊர்வலங்கள்!


ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டிருக்கற விஷயத்தை இப்ப உங்ககூட பகிர்ந்துக்கப் போறேன். முந்தா நாளா நான் மைலாப்பூர்லருந்து தி.நகருக்கு பஸ்ல வந்துட்டிருந்தேன். அப்போ ரோட்ல எதிர்ல ஒரு சவ ஊர்வலம் கிராஸ் பண்ணிச்சு. நடுரோட்டில வெடிகளை வெடிச்சு, டிராஃபிக்கை ஸ்தம்பிக்க வெச்சுட்டு கிராஸ் பண்ணினாங்க. 

முன்னால ‘உற்‌சாகத்தோட’ ஆடிட்டு வந்த ரெண்டு பேரு மாலையில இருந்து பூக்களைப் பிச்சு சுத்திலும் எறிஞ்சுட்டே போனாங்க. அதில ஒரு பூ ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த என் மடில வந்து விழ... அருவெறுப்போட தூக்கி எறிஞ்சேன். அந்த சவ ஊர்வலம் கிராஸ் பண்ணி, ட்ராஃபிக் கிளியராகி பஸ் நகர்றதுக்குள்ள எனக்கு லேசா மயக்கமே வந்துடுச்சு.

பொதுவா... நம்மைச் சேர்ந்த சொந்தங்கள்ல ஒண்ணு பிரிஞ்சிடுச்சுன்னா... அது பெரிய வேதனை இல்லையா? அந்த நபரின் இறுதி ஊர்வலம் அமைதியாத்தா‌னே நடக்கணும்? புராண காலத்துல நரகாசுரன்னு ஒருத்தன் தான் இறந்த தினத்தை மக்கள் துக்கம் எதுவுமில்லாம பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும்னு வரம் கேட்டானாம். அதான தீபாவளின்னு ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கேன்.

 இப்படி இறந்தவரோட சவ ஊர்வலத்துல வெடியெல்லாம் வெடிச்சு கொண்டாடிட்டுப் போனா, அவங்க இறப்பினால உறவினர்களுக்கு துக்கம் இல்லை... சாவைக் கொண்டாடறாங்கன்னுதானே அர்த்தம் ஆவுது? இறந்து போனவங்க நரகாசுரன் மாதிரி ஏதாவது அசுரர்களா என்ன?

இந்த என் ஆதங் கத்தை எங்கம்மா கிட்ட (வழக்கம்போல) ஷேர் பண்ணிக் கிட்டப்ப ஒரு விஷ யம் சொன்னாங்க. ‘‘நிரூமா! மன்னர்கள் காலத்துல எல்லாம் முறையான சாலை கள் கிடையாது. வெளியூர்லருந்து வர்ற உறவினர்கள் ரோட்ல பூ கிடக்கறதைப் பாத்தா, பிண ஊர்வலம் புறப்பட்டுடுச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்தப் பூக்களை ஃபாலோ பண்ணி, மயானத்துக்கு வருவாங்க. அதுக்காகத்தான் பாதையில பூக்களைத் தூவிக்கிட்டுப் போனாங்க. இதைத் தவிர பூக்களைத் தூவி இறந்தவரை சொர்க்கத்துக்கு அனுப்பறதுன்னும் ஒரு நம்பிககை உண்டு’’ அப்டின்னாங்க. முன்னோர்கள் காலத்துல ரோட்டு வசதி இல்லாததால அப்படிப் பண்ணினாங்கன்னா... இப்பவும் என்ன, ஏதுன்னு எதுவும் யோசிக்காம அதை அப்படியே தொடரணுமா என்ன?

இறந்த உடலை அதிக நாட்கள் வீட்ல வெச்சுக்காம உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யறதுக்குக் காரணமே இறந்த உடல்களிலிருந்து பரவும் கிருமித் தொற்று அதிகம்கறதுதான். அப்படிப்பட்ட பிணங்களின் மேல போடப்பட்ட மாலைகளை பிய்ச்சு, ரோடு பூரா எறிஞ்சுட்டுப் போறது என்ன நாகரீகம்னு புரியலை. பூவோட இதழ்களை உதிர்த்தாக் கூட கொஞ்சம் பரவாயில்லன்னு சொல்லலாம். பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!

இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு ‘நம்ம -------- இறந்தப்ப. சும்மா அமர்க்களமா எடுத்துட்டுப் போயி ஊ‌ரையே கலக்கிட்டோம்ல...’ என்று பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம்னு தெரியலை! இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை.

நான் பார்த்த ஒரு சினிமாவுல அதோட கதாநாயகி ரோட்ல ஆம்புலன்ஸ் கிராஸ் பண்றதைப் பார்த்தா, அதுல போறவங்களுக்கு என்ன கஷடமோ, அது உடனே சரியாகணும்னு சாமிகிட்ட ஒரு செகண்ட் வேண்டிக்கிட்டு அப்புறம்தான் நடப்பான்னு ஒரு விஷயம் சொல்லியிருந்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுமாதிரி சவ ஊர்வலங்கள் கிராஸ் பண்ணினா, ‘ஐயோ பாவம், யாரோ என்னவோ... ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும். இந்த மாதிரி ஊர்வலங்களைப் பாக்கிறப்பல்லாம் எனக்கு அந்தச் சவங்களின் மேலேயே வெறுப்பும் கோபமும்தான் வருது.

‘‘ரொம்பக் கொடூரமா சிந்திக்கறடி நீ’’ன்னு எத்தனை பேர் என்னை அடிக்கப் போறீங்களோ... இல்ல, ‘‘சரியாச் சொன்ன நிரூ!’’ன்னு எத்தனை பேர் கை குலுக்கப் போறீ்ங்களோ... தெரியலை. ஆனா... இந்த விஷயத்தை உங்க எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதுல எனக்கு மனசு ரொம்ப லேசாயிடுச்சு. பொறுமையாப் படிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

51 comments:

  1. மிகவும் சிந்திக்க வேண்டிய சிறப்பான விஷயங்களைத் தான் கூறியிருக்கிறீர்கள்.

    இங்கு திருச்சியில் [முருகன் டாக்கீஸ் அமைந்துள்ள] கீழ அரண் சாலை [East Bouleward Road] என்று ஒன்று உள்ளது.

    பெரிய மார்க்கெட்டிலிருந்து ஓயாமாரி என்ற சுடுகாடு வரை செல்லும் மிக நீண்ட சாலை அது.

    தினமும் நூற்றுக்கணக்காக இதுபோன்ற ஊர்வலங்கள் செல்வது வழக்கம்.

    சவத்தின் மேலுள்ள மாலைகளை ஒவ்வொன்றாக ஆகாயத்தை நோக்கி விட்டெறிவார்கள். அவை அங்குள்ள மின்சார ஒயர்களில் மாட்டிக்கொண்டு, பல நாட்கள் காய்ந்து போய் தொங்கிக்கொண்டு இருக்கும்.

    ஏற்கனவே நீடிக்கும் மின்தடைகளுடன் இவை காற்றில் அசைந்து ஆடும் போது இரண்டு ஒயர்களும் உரசி Short Circuit ஆகி Power Cut ஆவதுடன், ஒரு சில தீ விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

    பொதுவாக இவையெல்லாம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகுந்த தொல்லை தருபவையாகவே உள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்து மேலும் பல விவரங்களை அறியத் தந்த உங்களுக்கு மகிழ்வோடு கூடிய என் நன்றிகள் ஐயா...

      Delete
  2. நிரூ நல்லதோர் விடயத்தை பகிர்ந்து கொண்டீங்க எனக்கும் இந்த சந்தோகம் றொம்ப நாளா இருந்திச்சு. இப்போ நோ நோ.

    நொன் சாவு வீடுகளுக்கு போறது கிடையாது. அதற்கு அருவருப்பு காரணம் கிடையாது. எல்லாரும் கட்டி பிடிச்சு அழுவாங்களே அதுதான் பயம்....

    ReplyDelete
    Replies
    1. சாவு வீடு என்றால் எனக்கும அலர்ஜிதான் எஸ்தர். அதிலும் இந்த மாதிரி ஊர்வலங்கள்... மிகமிக வெறுப்பு. Many Thanks to youma!

      Delete
  3. இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை.

    நவீன நரகாசுர ஊர்வலங்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆதரித்த உங்களுக்கு என் நன்றி.

      Delete
  4. பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!

    கண்டிப்பாக அநியாயம் தான் நிரூ...... இந்த பழக்கங்கள் எப்பொழுதுதான் மாறுமோ தெரியவில்லை ...

    ReplyDelete
    Replies
    1. மாறணும்னு ஆசைப்படறேன் விஜி... நடந்தால் நமக்கு மகிழ்வுதானே...

      Delete
  5. //ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும். //

    நிரூ நீ சரியாக சொல்லியிருக்கே . நல்ல பகிர்வு ....

    ReplyDelete
    Replies
    1. வருத்தத்துக்கு மாறான உணர்வுகள் வருதேன்றதுதான் என் வருத்தமே. நல்ல பகிர்வுன்னு பாராட்டின என் Dear Friendக்கு My Heartful Thanks!

      Delete
  6. அருமை
    சிந்திக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
    Replies
    1. அருமைன்னு என்னை ஆமோதிச்ச உங்களுக்கு சந்தோஷத்தோட என் நன்றியை தெரிவிச்சுக்கறேன் ஸார்...

      Delete
  7. நிரஞ்சனாக்குட்டி....என்னைப்போலவே யதார்த்தத்தோட யோசிக்கிறீங்க.இப்ப உள்ள தலைமுறை இப்படியான விஷயங்களை நிறுத்தலாமென சிந்திச்சாலும் பெரியவங்க விடமாட்டாங்களாமே.அவங்க வளர்ந்தமுறை ...ஒண்ணுமே பண்ணமுடியாது குட்டிம்மா.....உங்க காலத்தில கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடும்ன்னு நம்புவோம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்க்கா... ஒரே நாள்ல எந்த மாற்றமும் நிகழ்ந்துடாது. மெல்ல மெல்லத்தான் மாறணும். என் தலைமுறைக்குப் பின்னயாவது மாறினாச் சரி. உங்களைப் போலவே யதார்த்தமா யோசிக்கேறேன்னு நீங்க சொன்னதும் சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சிட்டேன். My Heartful Thanks to you!

      Delete
  8. தெளிவான சிந்தனை சகோதரி.
    இன்னும் மக்களிடம் இந்தத் தெளிவு பிறக்க
    காலம் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவான சிந்தனைன்னு பாராட்டினதுக்கு நன்றியண்ணா.

      Delete
  9. அப்பாடா ஒருத்தர் இந்த நரகத்துல இருந்து விடுபட்டுட்டாறேன்னு எல்லோரும் கொண்டாடுராங்கன்னு எடுத்துக்கலாமே ஹி ஹி. ஒருவருக்கு செலுத்தும் இறுதி மரியாதை என்பது மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. அமைதி ஒருவகை மரியாதை. கூத்தாடுவது இன்னொரு வகை மரியாதை. அவ்வளவே... ஆனால் பூக்களை பிய்த்து எறிவது தவறு.

    //மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு
    ஒருத்தரை கடைசியா வழி அனுப்புவதற்கு நாமும் சில நேரத்தை செலவழித்தோம் என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் உடல்நலம் சரி இல்லாதோர், இக்கட்டான அவசரத்தில் இருப்பவர்களுக்கு இது தொல்லைதான். மற்றபடி தொல்லை என்று ஏன் நினைக்க வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... எல்லாத்தையும் பாஸிட்டிவாவே பாக்கற உங்க நல்ல எண்ணத்துக்கு தலைவணங்கறேன் ஸார். My Heartful Thanks to you!

      Delete
  10. ஃபிரெண்ட்...
    நீங்க சொன்னதை நான் முழுக்க முழுக்க ஆதரிக்கிறேன்.
    இந்த மாதிரியெல்லாம் நம் ஊரில் பார்த்ததால் தான் நான் இறந்தால் என் சடலத்தை மருத்துவத்திற்கு என்று எழுதிவைத்து விட்டேன்.

    செத்த பிறகாவது நாலு பேர் ஆராட்சிக்கு நம் உடல் உதவும் இல்லையா?
    முக்கியமாக உன்னைப் போல என்னைப்போல யாரும் நம்மைத் திட்டமாட்டார்கள் இல்லையா?

    அருமையான பதிவு நிரஞ்சனா.
    வாழ்த்துக்கள்ப்பா..

    ReplyDelete
    Replies
    1. உடல் தானம் பண்ணியிருக்கீங்களா... என் மதிப்புல எங்கயோ போய்ட்டீங்க ஃப்ரெண்ட். நான் இன்னும உடல்தானம் பண்ணலை. இனி பண்ணிடறேன். என் கருத்தை ஆமோதிச்சு அருமையான பதிவுன்னு வாழ்த்தினதுக்கு... Many Many Thanks!

      Delete
  11. intha samoogaththil ozikka padavEndiya visayangaL pala uLLana athil intha sava oorvala kondaattamum onRu. oru manithanin irappil santhOsam adaiyum intha manithargaLai enna venRu solvathu. naam anaivarum ithu pOnRa nigazchchigaLai thinanthOrum paarththu kadanthu senRu konduthaan irukinROm. anaivarukkum intha seyal thavaRaanathum enRu therinthirunthu athai yaarum pothuvil solla munvara villai thaangaL pagirnthamaikku nanRi

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்துப் பாராட்டின உங்களுக்கு மிக்க நன்றி நண்பேன்டா அவர்களே!

      Delete
  12. //இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு ‘நம்ம -------- இறந்தப்ப. சும்மா அமர்க்களமா எடுத்துட்டுப் போயி ஊ‌ரையே கலக்கிட்டோம்ல...’ என்று பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம்னு தெரியலை!//

    //சவ ஊர்வலங்கள் கிராஸ் பண்ணினா, ‘ஐயோ பாவம், யாரோ என்னவோ... ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும்.//

    துக்க நேரங்களிலும் அடுத்தவங்களுக்கு தொல்லைத் தந்தால் உண்மையில் அவங்கமேல் பரிதாபமே வராது. இதனால் நடக்கும் அநியாயங்களினால் பாதித்தவர்களுக்கே அதன் கஷ்டம் தெரியும். எதேர்ச்சையான உண்மையை சொல்லியுள்ளீர்கள், வாழ்த்துக்கள் சகோதரி! பொதுமக்களுக்கு தொல்லைத் தராத நல்ல மாற்றங்கள் நிச்சயம் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. மாற்றங்கள் நிச்சயம் வரணும்கறதுதான் என் ஆசையும். என்னை பாராட்டி ஊக்கப்படுத்தின உங்களுக்கு... Many Many Thanks!

      Delete
  13. சின்னப்பொண்ணு..செமத்த்யா சிந்தித்து எழுதி இருக்கீங்கப்பா நிரூ.

    //இறந்த உடலை அதிக நாட்கள் வீட்ல வெச்சுக்காம உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யறதுக்குக் காரணமே இறந்த உடல்களிலிருந்து பரவும் கிருமித் தொற்று அதிகம்கறதுதான். அப்படிப்பட்ட பிணங்களின் மேல போடப்பட்ட மாலைகளை பிய்ச்சு, ரோடு பூரா எறிஞ்சுட்டுப் போறது என்ன நாகரீகம்னு புரியலை. பூவோட இதழ்களை உதிர்த்தாக் கூட கொஞ்சம் பரவாயில்லன்னு சொல்லலாம். பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!
    //நானும் கூட யோசிக்கறது உண்டு.அதிலும் சவௌஉர்வலத்தை டூ வீலரில் போகும் பொழுது கிராஸ் செய்ய நேர்ந்தால் பூவைப்பிச்சிப்போடும் பொழுது மேலே விழுந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருப்பதுண்டு:(


    இந்த மாதிரி ஊர்வலங்களைப் பாக்கிறப்பல்லாம் எனக்கு அந்தச் சவங்களின் மேலேயே வெறுப்பும் கோபமும்தான் வருது.//த்சோ..மற்றவங்க பண்ணும் கூத்துக்கு பாவம் சவம் என்ன பண்ணும்:)

    ReplyDelete
    Replies
    1. பூ மேல விழுந்துடுமோன்னு என்ன்ப் போலவே பயந்து நடுங்கினது நீங்களும் தானா... அட, ஆமாம்ல... இறந்தவங்களை நொந்து என்ன புண்ணியம்? இனி நொந்துக்க மாட்டேன்க்கா. My Heartful Thanks to you Dear S.S.!

      Delete
  14. நல்ல விஷயம். பல சமயங்களில் வெறுப்பை உண்டாக்கும் இந்த செயல்கள்.

    வட இந்தியாவில் யாராவது இறந்தால், அவர்களது உடலை சுமந்து செல்லும்போது, “ராம் நாம் சத்ய ஹே” என்று சொல்லியபடியே செல்வார்கள். அப்படி எடுத்துச் செல்லும்போது வழியில் வருபவர்களும் ஓரத்தில் நின்று அஞ்சலி செய்வதைப் பார்க்க முடியும்.

    மனிதர்கள் பலவிதம்.... என்ன செய்வது நிரஞ்சனா... அவர்களாக மாறும் வரை வேறு வழியில்லை.

    ReplyDelete
    Replies
    1. அட, இந்த விஷயம் நல்லா இருக்கே ஸார். இப்படி ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போற முன்னுதாரணத்தை நம்மவர்கள் பின்பற்றினா எவ்வளவு நல்லா இருக்கும்..? மனிதர்கள் மாறும் வரை நாம் பொறுமையாய் காத்திருப்போம். என்னை கை குலுக்கிப் பாராட்டின உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  15. இதுல சிந்திப்பதுக்கு எதுவுமே இல்லீங்க...

    பழைய பாரம்பரிய சம்பிரதாயங்கள் ஒழிக்கப்பட வேண்டும் பிணத்தினை தாமதமாக எரிப்பதாலோ புதைப்பதாலோ எமக்கு நன்மையான விடயங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதிச்சதுக்கு சந்தோஷத்துடன் கூடிய என் நன்றி!

      Delete
  16. பாலா சாரோட கருத்துக்கு நான் முரண்படுரேன் காரணம் இந்த உலகை சுவர்க்கமாக நினைத்து வாழ்ந்த்வர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது அப்போ..?

    ReplyDelete
  17. பாலா சொன்னது..

    அப்பாடா ஒருத்தர் இந்த நரகத்துல இருந்து விடுபட்டுட்டாறேன்னு எல்லோரும் கொண்டாடுராங்கன்னு எடுத்துக்கலாமே//

    பாலா சாரோட கருத்தோடு நான் முரண்படுரேன் காரணம் இந்த உலகை சுவர்க்கமாக நினைத்து வாழ்ந்த்வர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது அப்போ..?

    ReplyDelete
    Replies
    1. பாலா ஸார் நல்ல விதமாவே நினைப்போம்னு நினைச்சு சொல்லியிருக்கார். உலகத்தை எப்படி நினைச்சு வாழ்ந்தாலும் என்னைககாவது ஒருநாள் முடிவு வந்துதானே தீரும்? அது மற்றவர்களுக்கு தொல்லை தராம அமைஞ்சா சரிதான்.

      Delete
  18. உங்கள் ஆதங்கம் 100 வீதம் சரியானதுதான்.பல தடவை இந்த குழப்பம் எனக்கும் வந்து போனதுண்டு.வழமை என்ற பெயரில் சில தவறுகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.யதார்த்தமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அதிஸயா! வழக்கம் என்ற பெயரில் ‌நடக்கும் சில விஷயங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். யதார்த்தமான பதிவுன்னு சொல்லி எனக்கு க்‌ளூகோஸ் தந்த உங்களுக்கு என் மனமார்‌ந்த நன்றி!

      Delete
  19. மிகவும் தெளிவான சிந்தனை நிரஞ்சனா. இன்னும் சில சவ ஊர்வலங்களில் காசு எறியும் பழக்கத்தையும் கண்டிருக்கிறேன். மிகவும் கொடுமையாக இருக்கும்.

    எந்த நிகழ்வாக இருந்தாலும் அது மகிழ்வோ துக்கமோ மற்றவர்களுக்குத் தொந்தரவு தராத வகையில் இருக்கவேண்டும்.

    சில வீடுகளில் நண்பர்கள் கூடினால் அக்கம்பக்கத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் இரவுநேரங்களில் (நள்ளிரவு வரையிலுமே) சத்தமாய் பாட்டு வைத்துக்கொண்டு இம்சிப்பார்கள். நோயாளிகள், குழந்தைகள் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. காசு எறிவாங்களா... நான் பார்த்ததில்லை. இன்னும் பெரிய கொடுமைதான் அது. நண்பர்கள் கூடினால் அக்கம் பக்கத்தவரை துன்புறுத்தறது பத்தி சொல்லியிருக்கீங்களே... எங்க ஏரியாவுல கோவில் திருவிழான்னு சொல்லிட்டு ஸ்பீக்கர் கட்டி பாட்டை அலற விடுவாங்க பாருங்க... அப்பப்பா... அதைப் பத்தி தனிப் பதிவே எழுதணும். என்னை Encourage பண்ணின உங்களுக்கு... My Heartful Thanks!

      Delete
  20. ''...இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை...*'
    சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல சிந்தனைக் கருத்து. நல்வாழ்த்து நிரஞ்சனா. இது போல மரணச் சடங்கும் அமைதியாக நடக்க வேணும் என்பது எனது ஆசை. துக்கம் இருக்கும் தான் அதைப் பெரிதாகக் காட்டி ஓலமிடுவது பற்றிக் குறிப்பிடுகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சரியான சிந்தனைங்கற உங்க வார்த்தைகள் எனக்கு தெம்பா இருக்குக்கா. உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி!

      Delete
  21. வணக்கம் நிரூ!உங்க ஆதங்கத்த வெளிக் காட்டி இருக்கீங்க.மூடப் பழக்க வழக்கம் எல்லாம் அந்தக் காலத்துக்கு கரெக்டு தான்.இளைய சமுதாயம் சிந்திச்சு எதிர்ப்புக் காட்டினா பெரிசுங்க பொத்திக்கிட்டு போகாதா?முயற்சி பண்ணனும்.இருக்கிறப்போ கஞ்சி ஊத்த மாட்டாங்க,செத்தப்புறம் தார,தப்பட்ட பூவுன்னு.........................ஹும்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க யோகாண்ணா! இளைய சமுதாயம் எதிர்ப்புக் காட்டணும்கற உங்க கருத்து மிகச் சரியானது. முயல்வோம். என்னை தட்டிக் கொடுத்து பாராட்டிய உங்களுக்கு My Heartful Thanks!

      Delete
  22. உங்கள் ஆதங்கம் நியமானது தான், நெல்லையிலும் மேளம் அடித்து வெடி போட்டு இறுதி ஊர்வலம் நடத்தும் வழக்கம் உண்டு, ஆனால் வயசானவர்கள் இறந்தால் மட்டுமே அப்படி செய்வார்கள் காரணம் அவர்கள் தங்கள் இல் வாழ்க்கையை நலமாக முடித்துக் கொண்டு மேலோகம் செல்கிறார்கள் என்பதால் தான். ஆனால் சென்னையிலோ நிலைமை தலைகீழ் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரானாலும் பாரபட்சம் பார்க்காமல் மேளமும் வெடியும் வெடிகிறர்கள்.

    சென்னை pon தர போக்குவரத்துகு நெரிசல் மிக்க இடங்களில் போலீசார் ஒழுங்குமுறைப் படுத்தினால் இதைத் தவிர்க்கலாம்.

    பல பேர் எழுத விவாதிக்க தயங்கும் ஒரு விஷயம் அதை பகிர வேண்டிய விதத்தில் பகிர்ந்தது அருமை

    இணைய இணைப்பு கிடைக்க நாள் ஆகிவிட்டது, அதனால் தாமத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பகிர்வைப் பாராட்டி உற்சாகப்படுத்திய உங்களுக்கு... My Heartful Thanks Friend!

      Delete
  23. மிக்க நன்றி நிரஞ்சனா!. இப்போது ஜோராக பெயரை அழுத்த வந்து இங்கு இறங்கியுள்ளேன். கருத்திடலிற்கும் நன்றியடா....இறையருள் கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மகிழ்ச்சியோட என் நன்றி.

      Delete
  24. உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருப்பின் வருகை தரவும்
    http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை நீங்கள் வலைச்சரத்தில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து மிகமிக மகிழ்ந்தேன். உங்களுக்கு My Heartful Thanks..!

      Delete
  25. இறப்பையும் பிறப்பையும் ஒரே சமநிலையில் கொள்ளவேண்டும் என்பதற்கான பொருள் இந்த ஆர்பாட்டம் ஆனாலும் இபோது அது கொஞ்சம் அதிகரித்துதான் போகிறது .உன் மனநிலை இன்னும் சமநிலை கொள்ளவைல்லை என்பது புரிகிறது நிரஞ்சனா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்க்கா. இன்னும் என் மனம் சமநிலை கொள்ளத்தான் இல்லை. எனக்கு மகிழ்ச்சி தந்த உங்களின் வருகைக்கு My Heartful Thanks!

      Delete
  26. முக்கால் வாசி, நாம பின்பற்றும் சடங்குகள்,
    காலத்திற்கு ஏற்றவை அல்ல.
    வெறும் சடங்குகளே!

    ReplyDelete
  27. I came here. There is no new post. Best of luck...I will come another day..bye..
    Vetha.Elangathilakam

    ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!